வேலூரில் விடிய விடிய வாட்டி எடுக்கும் குளிரால் பொதுமக்கள் கடும் அவதி


வேலூரில் விடிய விடிய வாட்டி எடுக்கும் குளிரால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 6 Jan 2019 11:03 PM GMT (Updated: 6 Jan 2019 11:03 PM GMT)

வேலூரில் விடிய விடிய வாட்டி எடுக்கும் குளிரால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட நேர்ந்துள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே வேலூரில்தான் வெயிலின் அளவு அதிகமாக காணப்படும். சாதாரணமாக 105 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தும். அதேபோல் குளிர் காலத்தில் கடுங்குளிரும், பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஊட்டி, கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையே வேலூரிலும் காணப்படுகிறது. இரவு நேரங்களில் கடுங்குளிரால் உடல் நடுங்குகிறது. பகலில் கூட உடல் விறைத்துப் போகும் அளவிற்கு குளிர்ந்த காற்று வீசுகிறது. காலை 9 மணி வரை குளிரின் தாக்கம் இருக்கிறது.

இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மதிய வேளையில் குடிநீர் குழாயை திறந்தால் கூட தண்ணீர் ஜில்லென்று வருகிறது. காலையில் வெளியில் வரும் பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லாய், மப்ளர், கம்பளி ஆகியவற்றை அணிந்தும் சால்வையைபோர்த்திக்கொண்டும் தான் வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொளுத்தி அதில் குளிர் காய்கின்றனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரிய விட்டு மெதுவாக செல்கின்றன. மாலை 7 மணிக்கே குளிரின் தாக்கம் தொடங்கி விடுகிறது.

குளிரின் காரணமாக ஸ்வெட்டர், குல்லா, கோட் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. வேலூர் கோட்டை மைதானம், அண்ணா கலையரங்க பகுதியில் தற்காலிக ஸ்வெட்டர் கடைகளில் இவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. கடுங்குளிரினால் வேலூர் மாநகர பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.


Next Story