திருப்பனந்தாள் அருகே வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலை பள்ளத்தில் விழுந்தது


திருப்பனந்தாள் அருகே வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலை பள்ளத்தில் விழுந்தது
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 7 Jan 2019 6:55 PM GMT)

திருப்பனந்தாள் அருகே வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலை பள்ளத்தில் விழுந்தது. அதை தீயணைப்பு படையினர் மீட்டு ஆற்றில் விட்டனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ளது அணைக்கரை. இங்கு உள்ள கொள்ளிடம் ஆறு, முதலைகள் நிறைந்த பகுதியாகும். ஏராளமான முதலைகள், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் வசிப்பதாக கூறப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் செல்லும்போது ஆற்றுக்குள் வசிக்கும் முதலைகள் வெளியே தென்படுவதில்லை.

ஆற்றில் தண்ணீர் குறைந்து விட்டால் முதலைகள் தண்ணீரை தேடி, ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் முழு கொள்ளளவுடன் சென்றது. இதனால் முதலைகளை பார்க்க முடியவில்லை. தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ள ஓட்டம் குறைந்து விட்டது.

இந்த நிலையில் அணைக்கரை விநாயகம் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று திடீரென ஒரு முதலை புகுந்தது. அந்த முதலை எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்தது.

இதுகுறித்து திருவிடைமருதூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பள்ளத்தில் இருந்து வெளிவர முடியாமல் போராடிக்கொண்டிருந்த முதலை மீது கயிற்றை கட்டி மீட்டு, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை ஊருக்குள் வர தொடங்கி இருப்பதால் ஆற்றங்கரையோர கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

தோட்டத்துக்குள் புகுந்த முதலை பள்ளத்தில் விழுந்திருக்காவிட்டால், வீட்டுக்குள் புகுந்திருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். மேலும் கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story