ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது பொதுமக்களுக்கு வினியோகிக்க முடியாமல் ஊழியர்கள் திணறல்


ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது பொதுமக்களுக்கு வினியோகிக்க முடியாமல் ஊழியர்கள் திணறல்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 7:33 PM GMT)

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்க முடியாமல் ஊழியர்கள் திணறினார்கள்.

நெல்லை,

பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்போடு கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆயிரம் ரூபாயுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 5-ந் தேதி 10 குடும்பங்களுக்கு இந்த திட்டத்தை வழங்கி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அதோடு சேர்ந்து ரூ.1,000 ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

ரேஷன் கடைகளுக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்கள் வாரியாக ஒவ்வொரு நாளும் வழங்க திட்டமிட்டு, அதன் முதல்நாள் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த சிறப்பு தொகுப்பு திட்டங்களை முறையாக மக்களுக்கு வழங்க முடியாமல் ஊழியர்கள் திணறினார்கள். சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தாமதமாக வந்ததாலும், அதை ‘பேக்கிங்’ செய்வதில் காலதாமதம் ஆனதாலும் முதல்நாளில் பலருக்கு வினியோகிக்க முடியாமல் போனதாக ஊழியர்கள் தெரிவித்தனர். சில கடைகளில் கரும்பு கட்டுகள் வருவதில் தாமதம் ஆனதாலும் பரிசு தொகுப்புகளை வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.

சில கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் தயார் நிலையில் இருந்தாலும், ஆயிரம் ரூபாய் பொதுமக்களுக்கு கொடுக்காமல் பரிசு தொகுப்புகளை மட்டும் வழங்க முடியாது என்று ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களை மறுநாள்(இன்று) வருமாறு சொல்லி திரும்பி அனுப்பினர். பாளையங்கோட்டை பெருமாள்புரம் உள்ளிட்ட சில ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் தொகுப்புகளை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘எங்களுக்கு பொருட்கள் சரியான நேரத்துக்கு வந்தால் நாங்கள் அதை ‘பேக்கிங்’ செய்து கொடுத்து இருப்போம். ஆனால் அதில் தாமதம் ஏற்பட்டதால் எங்களால் முறையாக வழங்க முடியவில்லை. மேலும் ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்குவதிலும் சரியான முன்னேற்பாடு இல்லாததால் அதிலும் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இலவச வேட்டி, சேலைகளை வருவாய்த்துறை அலுவலர்கள் வழங்குவார்கள். இந்த முறை எங்களையே கொடுக்க சொல்கிறார்கள். இதனால் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. அதிகாரிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்“ என்றார்.

Next Story