திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jan 2019 10:15 PM GMT (Updated: 7 Jan 2019 8:01 PM GMT)

திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் ராமலிங்கநகர் முதலாவது மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பாலவடிவேல்முருகன் (வயது 44). பீடி நிறுவனம் நடத்தி வரும் இவர் வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை ஆனந்தன் வசித்து வருகிறார். பாலவடிவேல்முருகன் மாடியில் வசிக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கீழ்த்தளவீட்டின் பக்கவாட்டு கதவை மர்மநபர்கள் உடைத்து அதன் வழியாக நுழைந்தனர். மேலும் வீட்டினுள் பூஜை அறை அருகே பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகளை திருடிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில் வீட்டிற்குள் மர்மநபர்கள் நடமாட்டம் இருப்பதை போல உணர்ந்த ஆனந்தன் உடனடியாக தனது மகன் பாலவடிவேல் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் விரைந்து வந்து பார்த்த போது நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது.

இதையடுத்து உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பால வடிவேல்முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் ராமலிங்க நகர் 5-வது தெரு அகமது காலனியில் மற்றொரு வீட்டில் நூதன முறையில் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அந்த பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த்குமார் (31). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 5-ந்தேதி திருச்சி வந்திருந்தார். வீட்டில் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் இருந்தபோது இரவில் அரவிந்த்குமார் வெளியில் சென்று வந்தார்.

இந்த நிலையில் வீட்டின் படுக்கை அறையில் அவரது தாய் கழற்றி வைத்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, 3 பவுன் வளையல் திருடு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் ஜன்னலை பார்வையிட்ட போது அதில் கொசுவலை கிழிக்கப் பட்டிருந்தது. கொசு வலையை மர்மநபர்கள் கிழித்து அதன் வழியாக கையையோ அல்லது நீளமான கம்பையோ விட்டு நகைகளை திருடியது தெரியவந்தது.

இதற்கிடையில் அகமது காலனியில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டியன் பொன்னையன் வீட்டில் மேஜையில் பர்சில் வைத்திருந்த ரூ.42 ஆயிரம் திருடு போனது. அவரது வீட்டிலும் ஜன்னலில் கொசுவலையை கிழித்து அதன்வழியாக மர்மநபர்கள் கம்பு அல்லது கம்பியை விட்டு பர்சை திருடியுள்ளனர். இந்த 3 வீடுகளில் மொத்தம் 18 பவுன் நகைகள், ரூ.42 ஆயிரம் திருட்டு போயுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

3 வீடுகளிலும் கடந்த 5-ந்தேதி நள்ளிரவு முதல் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்குள் திருட்டு நடந்துள்ளது. ஒரே நபர்கள் தான் அடுத்தடுத்து தங்களது கைவரிசைகளை காட்டி யிருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதியில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். வீட்டின் ஜன்னல்களில் கொசுவலையை கிழித்து அதன் வழியாக நகை, பணத்தை திருடும் கும்பல் திருச்சி மாநகரில் தற்போது புதிதாக புகுந்துள்ளது. இந்த கும்பலை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story