வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில் முதன்மை கல்வி அலுவலக ஊழியர்-மனைவிக்கு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு


வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில் முதன்மை கல்வி அலுவலக ஊழியர்-மனைவிக்கு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Jan 2019 11:06 PM GMT (Updated: 7 Jan 2019 11:06 PM GMT)

வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில் முதன்மை கல்வி அலுவலக ஊழியர் மற்றும் அவரது மனைவிக்கு ஜெயில் தண்டணை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வேலூர்,

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஊழியருக்கு 5 ஆண்டும், அவருடைய மனைவிக்கு 4 ஆண்டும் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது55). இவருடைய மனைவி வளர்மதி (50). முரளி வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு கொணவட்டம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.

அப்போது முரளி வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து அப்போதையை லஞ்சஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுதாகரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முரளி வருமானத்திற்கு அதிகமாக ரூ.55 லட்சத்திற்கு தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் சொத்து சேர்த்தது தெரியவந்தது. இந்த சொத்தின் அப்போதைய சந்தை மதிப்பு ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது.

இது குறித்து வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி பாரி வழக்கை விசாரித்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முரளிக்கு 5 ஆண்டும், அவருடைய மனைவி வளர்மதிக்கு 4 ஆண்டும் ஜெயில் தண்டனை விதித்ததோடு தலா ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story