விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் 100 பேர் கைது


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் 100 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 7:00 PM GMT)

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொரடாச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரடாச்சேரி,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரத்திற்கு குறையாமல் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

கொரடாச்சேரி ரெயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். கொரடாச்சேரி ரெயில் நிலையத்தில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் 1 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

இந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன் (கொரடாச்சேரி), ராதா (வலங்கைமான்), ராஜமாணிக்கம் (நீடாமங்கலம்), கெரக்கோரியா (குடவாசல்) மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியல் போராட்டத்தை முன்னிட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, சரவணன், செல்வம் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story