குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:15 PM GMT (Updated: 9 Jan 2019 5:23 PM GMT)

குளச்சல் அருகே ராணுவவீரர் வீட்டில் 2½ பவுன் நகை– பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் எட்வர்சன் (வயது 50). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலா(42). இவரது தாயார் வீடு, குளச்சலை அடுத்த கோணம்காடு பகுதியில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கலா, கோணம்காட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார்.  

இந்தநிலையில் நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், அங்கு பீரோவில் இருந்த 2½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.  கைரேகை நிபுணர்கள்அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story