பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: சாலை மறியலில் ஈடுபட்ட 313 பேர் கைது


பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: சாலை மறியலில் ஈடுபட்ட 313 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 8:55 PM GMT)

மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 313 பேர் கைது செய்யப்பட்டனர்.

கறம்பக்குடி,

கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில், தாலுகா அமைப்பாளர் விஜயன் தலைமையில் அம்புக்கோவில் முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து இலுப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் ரெங்கசாமி, ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய செயலாளர்கள் ஜோசி, ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சண்முகம் சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் சுப்பையா வாழ்த்துரை வழங்கினார்.

இதில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 21 பேரை இலுப்பூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல் ஆவுடையார் கோவில் கடை வீதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 13 பேரை ஆவுடையார் கோவில் போலீசார் கைது செய்தனர்.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடியில் விவசாய தொழிற்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 32 பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மணமேல்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமையன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 65 பேரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அறந்தாங்கியில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில், மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கீரனூரில் மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிற்சங்கத்தினர் 39 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

Next Story