ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு


ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:53 PM GMT (Updated: 9 Jan 2019 11:02 PM GMT)

ஈரோட்டில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு,

ஈரோடு நல்லியம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் பிரபு. டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி (வயது 26). இவர்களுக்கு அபினவ் (5) என்கிற மகனும், ஹாசினி (2) என்கிற மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துமதி ஏலச்சீட்டு போட்டு உள்ளார். அதுபற்றிய தகவல் தெரிந்ததும் பிரபு, ஏற்கனவே குடும்பம் கஷ்டத்தில் உள்ள நிலையில் சீட்டு தேவையா? என்று இந்துமதியிடம் கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் பிரபு வேலைக்கு சென்றுவிட்டு கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் பவளத்தாம்பாளையத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்துமதி தனது கணவர் பிரபுவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். அதற்கு சரியாக பிரபு பதில் அளிக்காமல் செல்போன் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பிரபு வீட்டிற்கு செல்ல நினைத்தார். இதையடுத்து நண்பரின் வீட்டில் இருந்து அவருடைய வீட்டிற்கு சென்றார். கதவை திறந்து உள்ளே சென்றபோது அபினவும், ஹாசினியும் தூங்காமல் இருந்தனர். அப்போது படுக்கையில் அறையில் இருந்து சத்தம் கேட்டதாக அபினவ் தனது தந்தையிடம் தெரிவித்தான்.

உடனடியாக அவர் கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அருகில் உள்ள ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். உள்ளே இந்துமதி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக மேலே ஏறி சிமெண்டு சீட்டாலான மேற்கூரையை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இந்துமதியை அவர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இந்துமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story