அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் 110 பேர் கைது


அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் 110 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:21 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிக்கல் அருகே பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிக்கல் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளையும் கணக்கெடுத்து, ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே புயலால் பாதிக்கப்பட்டு கணக்கெடுத்த சிக்கல் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் புயல் நிவாரணம் ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி சிக்கல் அருகே நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு சிக்கல் தி.மு.க. ஊராட்சி செயலாளர் சுரேந்தர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட தலைவர் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப் பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் திரளான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின்னர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்து, கீழ்வேளூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக நாகை- திருவாரூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story