விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 8:20 PM GMT)

விஸ்வாசம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புதுக்கோட்டை,

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நேற்று வெளியாகியது. இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டையில் விஸ்வாசம் திரைப்படம் 2 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில், தாசில்தார் பரணி, கிராம நிர்வாக அதிகாரி வசந்த்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தியேட்டரில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா?, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களா? கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகிறதா? என சோதனை செய்தனர். மேலும் படம் பார்க்க வந்தர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்களை சரிபார்த்தனர். அப்போது டிக்கெட்டில் எந்த தேதி, எத்தனை மணி காட்சி என குறிப்படவில்லை ஏன் என அதிகாரிகள் தியேட்டர் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த சோதனையில் தியேட்டரில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதல் நபர்களை படம் பார்க்க அனுமதிக்கப்பட்டதும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இது குறித்து கலெக்டரின் கணேஷின் ஆலோசனையை பெற்று சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு அபராதம் விதிக்கப் படும் என்றார். 

Next Story