திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் பரிசு கிடைக்காததால் பொதுமக்கள் சாலைமறியல்


திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் பரிசு கிடைக்காததால் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 11 Jan 2019 12:26 AM GMT (Updated: 11 Jan 2019 12:26 AM GMT)

திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு கிடைக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட சுண்டமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் காலைமுதல் வெகு நேரம் காத்திருந்தனர். இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் பச்சை நிற ரேஷன்கார்டுகளுக்கு மற்றும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளைநிற ரேஷன்கார்டுகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தனர்.

இதனால் வெகு நேரம் காத்திருந்த பொதுமக்கள் சிலர் திடீரென்று ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில் “குடிநீர் வரி, வீட்டுவரி, என அனைத்து வரிகளையும் தவறாமல் அரசுக்கு நாங்கள் செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது எப்படி எங்களை மட்டும் பிரித்து இலவச பொருட்களை வழங்காமல் தவிர்க்க முடியும், இலவச பொருட்கள் கொடுத்தால் அனைவருக்கும் ஒரே மாதிரியாக பாரபட்சம் பார்க்காமல் வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்தனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென்று சுண்டமேடு முருகம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசும், ரூ.1000-மும் வாங்குவதற்கு அப்பகுதி மக்கள் காலையிலேயே கூட்டமாக ரேஷன் கடை முன் காத்திருந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் ரேஷன் கடை திறந்து யாருக்கும் பொங்கல் பரிசு கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கோடங்கி பாளையத்தில் சாலைமறியல் செய்ய சாலையில் அமர்ந்தனர். இதனால் அந்த வழியாக ஜல்லி, கற்கள் ஏற்றி வந்த லாரி அங்கேயே நின்றது.

இதுகுறித்து தாசில்தார் அருணாவிடம் கேட்டபோது ரேஷன் கடை ஊழியர் பணம் எடுக்க வங்கிக்கு சென்றதால் தாமதமாகி விட்டது. பின்னர் பணம் எடுத்து வந்தவுடன் தொடர்ந்து பொங்கல் பரிசு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினார்.

திருப்பூர், காங்கேயம் ரோடு, முதலிபாளையம் பிரிவு, விஜயாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட சென்னிமலைபாளையத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன்கடை திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பகுதி நேரம் மட்டுமே செயல்படும். மற்ற நாட்களில் அங்குள்ள ரேஷன் ஊழியர் வேறு கடைக்கு சென்று பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் டோக்கன் பெற்றவர்கள் நேற்று ரேஷன்கடைக்கு அதிகாலை வந்தனர். அங்குள்ள கதவில் இன்று விடுமுறை பொங்கல் பரிசு திங்கட்கிழமை கொடுக்கப்படும் என எழுதி ஒட்டியிருந்தனர். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காதோ என்ற அச்சத்தில் முதலிபாளையம் பிரிவு, காங்கேயம் சாலையில் மறியல் செய்ய முயற்சித்தனர்.

தகவல் அறிந்த ஊரக இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, ரவி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி 2 நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்து மறியலை கைவிட்டனர்.பின்னர் தகவல் அறிந்த தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் நேரில் சென்று டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசு உடனடியாக கிடைக்க ஊழியருக்கு உத்தரவிட்டு வழங்க ஏற்படு செய்தார். அதன் மூலம் பொங்கல் பரிசு பெற்று சென்றனர். இருப்பினும் பாதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்னும் வழக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் ரேஷன்கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புக்கிலிபாளையம், வேட்டுவப்பாளையம், பொங்கேகவுண்டம்புதூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு பெறுவதற்காக ரேஷன்கடைக்கு வந்தனர். அங்கு ரேஷன்கடை பணியாளர் வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க கோரி மங்கலம்-சாமளாபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி அறிந்ததும் மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியம், ரேஷன்கடை பணியாளர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மதியம் 3 மணிக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

Next Story