பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 17 கி.மீ. நீள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலைக்கு விடிவுகாலம் 3 மாதங்களில் பணி தொடங்கும் என கலெக்டர் ராஜாமணி தகவல்


பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 17 கி.மீ. நீள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலைக்கு விடிவுகாலம் 3 மாதங்களில் பணி தொடங்கும் என கலெக்டர் ராஜாமணி தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2019 9:49 PM GMT (Updated: 11 Jan 2019 9:49 PM GMT)

பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 17 கி.மீ. நீள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலைக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது. 3 மாதங்களில் இந்த பணி தொடங்கும் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகத்தின் மத்திய பகுதியாக உள்ள திருச்சியில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்காக அரைவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு) அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த அரைவட்ட சுற்றுச் சாலையானது திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அசூர் என்ற இடத்தில் தொடங்கி, திருச்சி- புதுக்கோட்டை சாலை, திருச்சி- மதுரை சாலை, திருச்சி- திண்டுக்கல் சாலை ஆகிய 3 தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரத்தில் முடியும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.மொத்தம் 43 கி.மீ. நீளம் உள்ள இந்த சாலையை அசூரில் இருந்து பஞ்சப்பூர் வரையிலான 26 கி.மீ நீளத்திற்கு ஒரு நிறுவனமும், பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரையிலான 17 கி.மீ நீள சாலையை இன்னொரு நிறுவனமும் செய்வதற்கு ஒப்பந்தம் பெற்று பணிகளை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கின.

அசூர் முதல் பஞ்சப்பூர் வரையிலான தொகுப்பில் சுமார் 90 சதவீதமும், பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரையிலான தொகுப்பில் சுமார் 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்து முடிந்திருந்த நிலையில் ஏரி, குளங்கள், நீர்வழிப்பாதைகளை அழித்து சாலை அமைக்கப்படுவதாக கூறி விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதன் காரணமாக சாலை கட்டுமான பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்து கோர்ட்டு சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கலாம் என பச்சை கொடி காட்டிய பின்னரும் 10 ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இன்றி கிணற்றில் போடப்பட்ட கல் போல் அப்படியே முடங்கி போய் கிடந்தது.

மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவில் தாயனூர் ஏரி வழியாக சாலை அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்பட்டு இருந்ததால் ஏரி கரையோரத்தில் 6 கி.மீ நீளத்திற்கு மாற்றுப்பாதை வழியாக சாலை அமைக்கும் மறு வடிவமைப்பு திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தயாரித்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறுவதற்காக அனுப்பி வைத்து இருந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்து விட்டதால் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரையிலான 17 கி.மீ. நீள சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பதால் தற்போது மறு வடிவமைப்பு செய்யப்பட்ட 6 கி.மீ. நீள சாலைக்கு தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என மத்திய சுற்றுச் சூழல் துறை கூறி விட்டது. இதன் காரணமாக இந்த 17 கி.மீ. நீள சாலைக்கும் விடிவுகாலம் பிறந்து விட்டது என்றே கூற வேண்டும். மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பகுதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் 6 மாதத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அப்போது விவசாயிகள் அரைவட்ட சுற்றுச் சாலை அமைக்க தங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என கூறி விட்டனர்.எனவே கையகப்படுத்தப்பட உள்ள நிலம் பற்றிய 3 ஏ அறிவிப்பும், அதனை தொடர்ந்து இழப்பீடு வழங்குவதற்கான 3 டி அறிவிப்பும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள் ளது. ஏற்கனவே சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து உள்ள நிறுவனத்திடம் கேட்கப்படும். அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமே திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆணை வழங்கப்படும். அவர்கள் ஒத்துவராத பட்சத்தில் மீண்டும் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இன்னும் 3 மாதங்களில் இந்த பணியை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. 17 கி.மீ நீளம் உள்ள இந்த சாலையில் 3 இடங்களில் மேம்பாலங்களும், 5 பெரிய பாலங்களும், 40 குறும்பாலங்களும் அமைக் கப்படும். தோகைமலை சாலை உள்ளிட்ட 3 இடங்களில் சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அசூர் முதல் பஞ்சப்பூர் வரையிலான 26 கி.மீ நீள தொகுப்பில் இதுவரை பணி நிறைவடைந்துள்ள 15 கி. மீ போக மீதம் உள்ள 11 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கவேண்டியது உள்ளது. அத்துடன் குமார மங்கலம் ரெயில் நிலையம் அருகில் பாலமும் கட்ட வேண்டியது உள்ளது. இந்த பணிகளுக்காக ரூ.130 கோடிக்கான டெண்டர் கடந்த மாதம் 18-ந்தேதி விடப்பட்டது. இதில் பங்கேற்றவர்களின் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் பரிசீலனையில் உள்ளது. தொழில் நுட்ப ஆலோசனை குழு திட்டத்தை நிறைவேற்ற விண்ணப்பித்துள்ள நிறுவனம் தகுதி வாய்ந்தது தானா? என்பதை இறுதி செய்த பின்னர் ஒப்பந்த புள்ளிக்கு அனுமதி வழங்கப்படும். எனவே அசூரில் இருந்து பஞ்சப்பூர் வரை விடுபட்ட 11 கி.மீ. நீளத்திற்கு அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணி அடுத்த மாதம் (பிப்ரவரி ) தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

Next Story