வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ரூ.60 லட்சம் செலவில் புதுப்பிப்பு முதல் சேவையை தொடங்கியது


வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ரூ.60 லட்சம் செலவில் புதுப்பிப்பு முதல் சேவையை தொடங்கியது
x
தினத்தந்தி 11 Jan 2019 10:58 PM GMT (Updated: 11 Jan 2019 10:58 PM GMT)

வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் திருச்சி-ஹவுரா எக்ஸ் பிரஸ் ரெயில் ரு.60 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று மாலை முதல் சேவையை தொடங்கியது.

திருச்சி,

இந்தியாவில் பல ஆண்டு களாக ஓடிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ்-மெயில் ரெயில்களின் நிலையை மேம்படுத்திட ரெயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. இந்த மேம்படுத்தும் முயற்சிக்கு ‘திட்டக்கருவி’ என பெயரிடப்பட்டது. அதன்படி, திருச்சியில் இருந்து வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்:12663/64) மாலை 4.20 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ரூ.60 லட்சம் செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. இந்த ரெயிலில் மொத்தம் 23 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது ஏ.சி, வசதி பெட்டிகள்-5, படுக்கை வசதி பெட்டிகள்-14, முன்பதிவில்லா பெட்டிகள்-2 மற்றும் இதர பெட்டிகள் 2 இணைப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் முதன் முதலாக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை, சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மற்றும் கேரேஜ் ஒர்க்ஸ் பணிமனை ஆகிய 3 இடங்களில் புதுப்பிக்கும் பணி நடந்தது. அதாவது ரெயில் பெட்டிகளின் அனைத்து தரைத்தளம், கழிவறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் எல்.இ.டி.விளக்குகள், துருப்பிடிக்காத இரும்பு பொருட்களிலும் ஹைட்ரோபோபிக் பூச்சு செய்யப்பட்டது. பயணிகளின் சேவை மற்றும் கோரிக்கைக்காக ‘வாஷ்ரூம்’ அருகே உதவிக்கு அழைக்க ரெயில்வே எண் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பயணிகள் அந்த எண்ணிற்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.) அனுப்பினால் பணியாள் உடனடியாக அந்த பெட்டிக்கு வந்து விடுவார்.

மேலும் அனைத்து ரெயில் பெட்டிகளும் வெளிப்புறமாக நவீன முறையில் பெயிண்ட் அடித்து புதுப்பொலிவாக மாற்றப்பட்டன. இந்த ரெயிலில் மேம்படுத்தப்பட்ட புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து நேற்று மாலை 4.20 மணிக்கு ஹவுரா நோக்கி புறப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ரெயில் என்பதால் ரெயில் பெட்டிகளில் வண்ண வண்ண காகிதங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள், இந்த ரெயிலை வழியனுப்பி வைத்தனர்.

திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், ஓங்கேல், விஜயவாடா, எளுரு, ராஜமுந்திரி, விளைநகரம், பிரகாம்பூர், குர்தா ரோடு, புவனேசுவர், கட்டாக், பாட்ரக், பலசூர், ஹரக்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று ஹவுரா சென்றடைகிறது.

Next Story