தேசிய டேக்வாண்டோ போட்டியில் பள்ளி மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை


தேசிய டேக்வாண்டோ போட்டியில் பள்ளி மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 12 Jan 2019 11:15 PM GMT (Updated: 12 Jan 2019 5:44 PM GMT)

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய பெரம்பலூர் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் பெரம்பலூர் மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருபவர் சபிதா(வயது 16). இவர், நீலகிரி மாவட்டம் நெடுகுவா தாலுகா ஜக்கக்கம்பை கிராமத்தை சேர்ந்த விவசாயியான மணி- யசோதா தம்பதியின் மகள் ஆவார். சபிதா கடந்த 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் விடிசாவில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான 19 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார். இதில் 49 முதல் 52 கிலோ எடை பிரிவில் விளையாடி 3-ம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாணவி சபிதாவும் வெண்கலப்பதக்கம் பெற்றதற்காக தமிழக அரசு வழங்கும் ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகையை பெற தகுதி பெற்றிருக்கிறார். அந்த பரிசுத்தொகை இந்த ஆண்டில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்- அமைச்சரால் சபிதாவுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சபிதா ஏற்கனவே 9-ம் வகுப்பு படிக்கும் போது தெலுங்கானாவில் பள்ளி மாணவிகளுக்கான 17 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 38 முதல் 41 கிலோ எடை பிரிவில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கலப்பதக்கம் வெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒரு சாதனையை சபிதா படைத்துள்ளார். சாதனை மாணவி சபிதாவுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் ஆகியோர் மற்றும் விளையாட்டு விடுதி மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சபிதா ஏற்கனவே திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடந்த மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளிலும் பங்கேற்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

வெண்கலப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சபிதா இது குறித்து கூறியதாவது:-

டேக்வாண்டோ போட்டியில் அதிகம் கவனம் செலுத்த முடிந்ததால் தேசிய அளவில் சாதனை படைக்க முடிந்தது. ஆனால் அதற்கு தனியாக பயிற்சி பெற, குடும்பத்தில் பண வசதி இல்லை என்பதால் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பின்னர் பெரம்பலூரில் உள்ள மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன். இங்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணிய ராஜா, டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் ஆகியோர் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இதனால் தற்போது மத்திய பிரேதசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 3-ம் இடம் பிடிக்க முடிந்தது. தற்போது என்னை மேல்நிலை படிக்க வைப்பதற்கு விவசாயியான எனது பெற்றோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் பெற்றோர் என்னை கல்லூரி படிக்க வைப்பார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story