திருப்பூர் மாநகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


திருப்பூர் மாநகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 7:18 PM GMT)

திருப்பூர் மாநகரில் தடைவிதிக்கப்பட்ட 2½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையையும் மீறி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனைசெய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் நேற்று திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஜவுளி கடைகள், பேக்கரி, டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறும்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கடை வியாபாரிகள், வணிகர்கள், பேக்கரி, டீக்கடை, ஓட்டல் உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவுளிக்கடைகளில் ‘நான் ஓவன்’ பிளாஸ்டிக் பைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பைகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளோம். அதன்பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆய்வில் இந்த ‘நான் ஓவன்’ பைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜவுளிக்கடைக்காரர்கள் இந்த பைகளை தவிர்த்து காகிதம் மற்றும் கட்டை பைகளை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளோம். மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள பாலித்தீன் பைகளை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்றனர்.


Next Story