சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு பள்ளிகள், பஸ் நிலையங்களில் விழிப்புணர்வு ஓவியம் தன்னார்வ அமைப்பினர் புதிய முயற்சி


சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு பள்ளிகள், பஸ் நிலையங்களில் விழிப்புணர்வு ஓவியம் தன்னார்வ அமைப்பினர் புதிய முயற்சி
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 6:56 PM GMT)

‘உதவிடத்தான் பிறந்தோம்’ என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு பள்ளிகள், பஸ் நிலையங்களின் சுற்றுச்சுவர்களில் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து வருகின்றனர்.

சென்னை,

இந்த அமைப்பின் சார்பில் சென்னை சூளை, ராட்லர் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவரில் நேற்று விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

வேப்பேரி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ராஜேஷ் என்ற போலீஸ்காரரின் தகவலின்படி, பள்ளியின் அனுமதி பெற்றும் அசுத்தமாக இருந்த சுற்றுச்சுவரை சுத்தம் செய்து, ஓவியம் வரைந்தார்கள். ஆண்-பெண்கள் இணைந்து சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

3 மணி நேரம் செலவழித்து, சுற்றுச்சுவரில் மரம் வளர்ப்பது, பசுமையை போற்றுவது குறித்து ஓவியத்தை தீட்டினார்கள். இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த விஜய் என்பவர் கூறுகையில், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த பணியை செய்து வருகிறோம். அசுத்தமாக இருக்கும் அரசு பள்ளிகள், பஸ் நிலையங்களின் சுற்றுச்சுவர்களை வண்ண ஓவியத்தால் அலங்கரிக்கிறோம். அதில் மரம் வளர்ப்போம், தண்ணீரை சேமிப்போம், பெண் வன்கொடுமையை தடுப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி ஓவியங்கள் வரையப்படும். இதுமட்டுமில்லாமல், எங்கள் அமைப்பின் சார்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவியும், ரத்த தானமும் செய்து வருகிறோம்’ என்றார்.

Next Story