விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி


விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 14 Jan 2019 11:15 PM GMT (Updated: 14 Jan 2019 6:59 PM GMT)

விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரரையும், அவரது மனைவியையும் போலீசார் தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

விருதுநகர்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மேலகோவில்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 57). முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர்களது மகன் சுனில்குமார் (26). தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கும், நிலக்கோட்டை அருகே உள்ள மலையடிபட்டியை சேர்ந்த லோகேஷ்வரி(23) என்பவருக்கும் கடந்த 2017–ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் விருதுநகர் லட்சுமி நகரில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 13–ந்தேதி சுனில்குமார் வீட்டில் தனியாக இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அவரது மனைவி லோகேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். லோகேஷ்வரி கணவர் சுனில்குமார் இறந்தவுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனை தொடர்ந்து சின்னச்சாமி தனது மகன் தற்கொலை செய்துகொண்டதற்கு மருமகள் லோகேஷ்வரியும், அவரது பெற்றோரும்தான் காரணம் என கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு கொடுத்தார். இதற்கு ஆதாரமாக சுனில்குமார், லோகேஷ்வரி ஆகியோர் இருவரின் செல்போன் பேச்சு பதிவுகளை கொடுத்தார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சின்னச்சாமிக்கு உறுதியளிக்கப்பட்டது.

இதனிடையே லோகேஷ்வரி கடந்த 6–ந்தேதி நிலக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மாமனார் சின்னச்சாமி, மாமியார் ஜெயலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தார். இந்த மனு தொடர்பாக விசாரணைக்கு வரும்படி சின்னச்சாமியையும், அவரது மனைவி ஜெயலட்சுமியையும் நேற்று நிலக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இவர்கள் இருவரும் நேற்று மாலை விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். தங்களது மருமகள் லோகேஷ்வரி மற்றும் அவரது பெற்றோர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்ததுடன் பெட்ரோல் கேனையும் பறித்தனர்.

இதுபற்றி சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சின்னச்சாமியையும், அவரது மனைவி ஜெயலட்சுமியையும் விசாரணைக்காக சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ள பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story