‘‘ஜல்லிக்கட்டு தடை நீங்க மோடி தான் காரணம்’’ எச்.ராஜா பேட்டி


‘‘ஜல்லிக்கட்டு தடை நீங்க மோடி தான் காரணம்’’ எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 14 Jan 2019 11:00 PM GMT (Updated: 14 Jan 2019 8:02 PM GMT)

ஜல்லிக்கட்டு தடை நீங்க மோடி தான் காரணம் என எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

மதுரை ஆழ்வார்புரத்தில் பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘இந்துத்வா என்பது நாட்டின் மண்வாசனை. இங்கு யார் வேண்டுமானாலும் எந்த வகையான வழிபாட்டிலும் ஈடுபடலாம். நாம் தீவிரவாதத்துக்கு எதிராக மட்டுமே செயல்பட்டு வருகிறோம்’’ என்றார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகளாக அறிவித்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்கு பிரதமர் மோடி தான் காரணம். கொடநாடு விவகாரம் பற்றி தற்போது தான் சமூக வலைத்தளம் மூலம் அறிந்தேன். முதலில் சாதிக்பாட்ஷா விவகாரத்தை முடிக்கட்டும். பிறகு கொடநாடு விவகாரத்தை விசாரிக்கலாம். தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க. தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story