ஹெல்மெட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது


ஹெல்மெட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 Jan 2019 10:45 PM GMT (Updated: 16 Jan 2019 4:59 PM GMT)

ஹெல்மட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு,

கொச்சி நகர மதுவிலக்குத்துறை சப்–இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் உதவி அதிகாரிகளான ராமபிரசாத், ஜெயன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்த 2 வாலிபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

இதையொட்டி அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. இநத நிலையில் 2 வாலிபர்களும் தாங்கள் அணிந்து வந்த ஹெல்மெட்டை கழற்றாமல் அதிகாரிகளிடம் பேசி வந்தனர். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட்டை அதிகாரிகள் கழற்றினார்கள். அதில் தலா ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோட்டயம் ஈராட்டுப்பேட்டையை சேர்ந்த ஸஹல் (வயது 21), முகமது (22) என்று தெரிந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story