இலங்கையில் இருந்து 17 கிலோ தங்கத்துடன் வந்த மர்ம நபர் எங்கே? ராமேசுவரம் கடலில் பிடிபட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை


இலங்கையில் இருந்து 17 கிலோ தங்கத்துடன் வந்த மர்ம நபர் எங்கே? ராமேசுவரம் கடலில் பிடிபட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 16 Jan 2019 10:00 PM GMT (Updated: 16 Jan 2019 8:13 PM GMT)

இலங்கையில் இருந்து 17 கிலோ தங்கத்துடன் வந்த மர்ம நபர் எங்கே? என்பது குறித்து, ராமேசுவரம் கடலில் பிடிபட்ட அண்ணன்–தம்பியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு இலங்கை படகு ஒன்று நிற்பதை கண்டனர். இதையடுத்து அந்த படகையும், அதில் இருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த சிவராஜன்(வயது 41), அன்பு குமரன் என்ற சின்னத்தம்பி (38) ஆகியோர் என்பதும், அண்ணன்–தம்பிகளான இவர்கள் இருவரும் கடந்த 1990–ம் ஆண்டு அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்து மதுரை ஆனையூரில் உள்ள முகாமில் குடும்பத்துடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல முடிவு செய்து கடந்த 14–ந்தேதி இலங்கையில் இருந்து பாம்பன் வந்திருந்த பைபர் படகில் திருட்டுத்தனமாக அங்கு செல்ல முயன்றதாகவும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் இந்திய பணம், 10 அமெரிக்க டாலர், ஹாங்காங் பண நோட்டு ஒன்று, 2 ஜி.பி.எஸ். கருவிகள், 4 செல்போன்கள், 3 பவுன் தங்கசங்கிலி, ஒரு தோடு, ஆதார் கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் இவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் எஸ்.எஸ்.காலனி, கூடல் நகர், மீனாட்சிபுரம், அய்யர் பங்களா ஆகிய பகுதிகளில் மீன்கடை வைத்து நடத்தி வருவதும், சிவராஜன் மீது மதுரை போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

கடன் பிரச்சினை காரணமாக இலங்கை வவுனியாவில் பூர்வீக இடத்தை விற்பனை செய்து விட்டு அந்த பணத்தை கொண்டு வந்து, இங்குள்ள கடன்களை அடைக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காகவே இலங்கை செல்ல முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

அண்ணன்–தம்பிகளை இலங்கைக்கு அழைத்துச்செல்ல ஒரு பைபர் இலங்கையில் இருந்து வந்துள்ளது. அந்த படகில்தான் 17 கிலோ தங்கத்துடன் ஒரு மர்ம நபரும் வந்துள்ளார். இங்கு மறைவான பகுதியில் அவர் கரையேறியதும் அவரை ஒரு பிரமுகர் காரில் அழைத்துச்சென்று இருக்கிறார். அதன்பிறகே சிவராஜனும், சின்னத்தம்பியும் அந்த படகில் இலங்கைக்கு புறப்பட்டு இருக்கிறார்கள்.

நடுக்கடலில் படகு பழுதானதால் அவர்கள் இருவர் ரோந்து படையினரிடம் சிக்கி இருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து தங்கத்துடன் வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து புலனாய்வுத்துறையினர் துருவி துருவி இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை மடக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நடுக்கடலில் பழுதான படகில் இருந்து மேலும் 2 பேர் தப்பி இருக்கலாம் எனவும், அவர்கள் 2 பேரும் படகோட்டிகள் என்றும் மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த 2 பேரும் ராமேசுவரத்தில்தான் பதுங்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story