சின்னதாராபுரம் அருகே எலவனூர் முருகன் கோவில் திருவிழா


சின்னதாராபுரம் அருகே எலவனூர் முருகன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 16 Jan 2019 10:00 PM GMT (Updated: 16 Jan 2019 8:36 PM GMT)

சின்னதாராபுரம் அருகே எலவனூர் முருகன் கோவிலில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூரில் முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் தினமும் குளித்து விட்டு கோவில் முன்பு அமர்ந்து பக்தி பாடல் பாடினர். அதன்பிறகு அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரம் உள்ள விநாயகர் கோவிலுக்கு பாடிக்கொண்டே சென்றனர். பின்னர் அங்கிருந்து வரும் வழியில் மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் முருகன் கோவிலுக்கு வந்து முருகனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். இதில் தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் இனிப்பு பொங்கல், சுண்டல் பக்தர்களுக்கு வழங்கப்ட்டது.

தொடர்ந்து நேற்று முன் தினம் காலை முருகன் வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் வீதி உலா வந்தார். அப்போது கூடிநின்ற பொதுமக்கள் தேங்காய், பழம் வைத்து சாமி கும்பிட்டனர். ஒரு சில வீடுகளில் இரவும் பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், பால், காபி, இனிப்பு வகைகள் கொடுத்தனர். நேற்று காலை 8 மணிக்கு விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜை செய்தனர். அதன்பிறகு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story