அந்தியூர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்


அந்தியூர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்
x
தினத்தந்தி 18 Jan 2019 9:45 PM GMT (Updated: 18 Jan 2019 1:01 PM GMT)

அந்தியூர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம் செய்தது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன். விவசாயியான இவருக்கு அந்தியூர் வனப்பகுதியை ஒட்டி 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் கதளி ரக வாழை பயிரிட்டுள்ளார். வாழைகள் நன்கு வளர்ந்து குலை தள்ளும் நிலையில் இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 2 ஆண் யானைகள், ஒரு பெண் யானை, ஒரு குட்டி யானை வெளியேறின. பின்னர் இந்த யானை கூட்டம் தீவனத்தை தேடி நஞ்சப்பனின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் யானைகள் வாழை குருத்துகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன.

பக்கத்து தோட்டத்தில் காவலுக்கு இருந்தவர்கள் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு நஞ்சப்பனுக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு விரைந்து வந்தார்.

அதன்பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து தகர டப்பாக்களில் கல்லை போட்டு சத்தம் எழுப்பினார்கள். ஆனால் யானைகள் தோட்டத்தை விட்டு அசையவில்லை. பிறகு தீப்பந்தம் கொளுத்தி சத்தம் போட்டார்கள். ஆனாலும் யானைகள் வெளியேறவில்லை. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றன.

இதுபற்றி நஞ்சப்பன் கூறும்போது, ‘வனப்பகுதியையொட்டி இருப்பதால், அடிக்கடி யானைகளும், காட்டுப்பன்றிகளும் தோட்டத்துக்குள் புகுந்து நாசம் செய்கின்றன.

அகழி வெட்டியும், மின்வேலி அமைத்தும் எந்த பயனும் இல்லை. 250 வாழைகள் நாசம் ஆகிவிட்டன. வனத்துறையினர் இதற்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்‘ என்றார்.


Next Story