தேர்வில் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம்


தேர்வில் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:15 PM GMT (Updated: 18 Jan 2019 2:49 PM GMT)

புதிய தேர்வு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

புதிய தேர்வு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு கட்டுப்பாடு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2017–ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பழைய விதிமுறையின்படி, முதல் பருவ தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்த குறிப்பிட்ட பாடங்களை 2–வது பருவ தேர்வில் மறுபடியும் எழுத முடியும். ஆனால் புதிய விதிமுறைப்படி முதல் பருவ தேர்வின் போது தோல்வி அடைந்த (அரியர்) பாடத்துக்கான தேர்வை 3–வது பருவ தேர்வின் போதுதான் எழுத முடியும். அதே போல் 2–வது பருவ தேர்வின் போது தோல்வி அடையும் பாடங்களுக்கான தேர்வை, 4–வது அல்லது 6–வது பருவ தேர்வின் போதுதான் எழுத முடியும் என்று மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

புதிய விதிமுறையால், ‘அரியர்’ தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கான காலம் முடிவடைந்த பிறகும் அரியர் இருந்தால் அதனை எழுதி தேர்ச்சி பெறுவதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி இந்த புதிய தேர்வு விதிமுறைகளை ரத்து செய்ய மாணவ–மாணவிகன் வலியுறுத்தி வந்தனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் நேற்று நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் படித்து வரும் என்ஜினீயரிங் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல வளாகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த பேராசிரியர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக மாணவர்கள் எழுத்து மூலமாக கோரிக்கை மனு கொடுத்தால் அதை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்து தீர்வுகாணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்த விட்டு, தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story