கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை


கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை
x
தினத்தந்தி 19 Jan 2019 12:15 AM GMT (Updated: 18 Jan 2019 7:48 PM GMT)

கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சஜிதா (வயது 32). இவர்களுடைய மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). பிரபாகரன் அதே பகுதியில் உள்ள சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரபாகரன் திடீரென்று இறந்துவிட்டார். இதனால் சஜிதா, மனோஜ் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். அவர், நேற்று காலை 7 மணி முதல் ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், எம்.கைகாட்டி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சிறுமியை தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினர். அப்போது அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் பொம்மை ஒன்று மிதந்து கொண்டிருந்தது.

உடனே போலீசார் அருகில் இருந்த சிறுமியின் சகோதரி சுபாஷினியை அழைத்து அந்த பொம்மை ஸ்ரீஹர்ஷினி உடையதா? என்று கேட்டனர். அதை அவர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள், அப்பகுதி மக்களின் உதவியுடன் மாலை 5.30 மணிக்கு தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:–

சிறுமியின் வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த இரும்பு மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சிறுமி பிணமாக கிடந்த பங்களாவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளியை விரைவில் பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story