செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Jan 2019 10:45 PM GMT (Updated: 18 Jan 2019 9:59 PM GMT)

செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னங்குறிச்சி,

சேலம் கன்னங்குறிச்சி ஆறுமுகஅய்யர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மணிவண்ணன் (வயது 25). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையிடம் விலை உயர்ந்த செல்போன் ஒன்று வாங்கி தரும்படி கேட்டார்.

இதற்கு அவர் பொங்கல் பண்டிகையையொட்டி வாங்கி தருவதாக கூறினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிவண்ணன் மீண்டும் தந்தையிடம் பொங்கல் பண்டிகை முடிந்தும் செல்போன் வாங்கி தரவில்லையே என்றார். இதற்கு அவர் விரைவில் வாங்கி தருவதாக மகனிடம் கூறினார்.

இதனால் விரக்தி அடைந்து காணப்பட்ட மணிவண்ணன் இரவில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் விளக்குகள் நீண்டநேரமாக எரிந்து கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டினர். ஆனால் திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மணிவண்ணன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story