தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் கனிமொழி எம்.பி. பேச்சு


தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 19 Jan 2019 10:15 PM GMT (Updated: 19 Jan 2019 1:24 PM GMT)

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

ஓட்டப்பிடாரம், 

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து சிலோன் காலனியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று இரவில் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சண்முகையா முன்னிலை வகித்தார்.

மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

பயன்படாத ஆட்சி...

தமிழகத்தில் மக்களுக்கு பயன்படாத ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், அனைத்து பகுதிகளிலும் நாளுக்கு நாள் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல், பிரச்சினைகள் கூடிக்கொண்டே செல்கிறது. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர தவறி விட்டது. இதனால் இளைஞர்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றக்கூடிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும்போது, அதனை நல்ல வாய்ப்பாக நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதனை மன்னிக்க முடியாது, மறக்க முடியாது.

விரைவில் ஆட்சி மாற்றம்...

ஓட்டப்பிடாரம் பகுதியில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பள்ளிக்கூட கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை) வரியால் சிறுதொழில்கள் முடங்கி உள்ளன. புதியம்புத்தூர் பகுதியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இங்கு விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்கும் வகையில், குளிரூட்டப்பட்ட கிட்டங்கி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

பின்னர் அவர், புதியம்புத்தூரில் நடந்த தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

தி.மு.க. மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், ஏ.கே.பூபதி, மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், துணை அமைப்பாளர் சு.குமார், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் அம்பேத்கார், மாவட்ட பிரதிநிதி ஜோசப், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துகுமார், நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story