மஞ்சூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை


மஞ்சூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2019 10:15 PM GMT (Updated: 19 Jan 2019 7:33 PM GMT)

மஞ்சூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், சிறுத்தைப்புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதேபோல் சிறுத்தைப்புலிகள் குடியிருப்புக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்தநிலையில் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலைகண்டி, காந்திபுரம், கெரப்பாடு, முள்ளிகூர் ஆடா, லாரன்ஸ் பகுதிகளில் குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த யானைகள் அப்பகுதியில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மேரக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை நாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

இதையடுத்து அந்த யானைகள் அவலாஞ்சி அணை ஓரத்தில் நேற்று முகாமிட்டன. இந்த யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மனித உயிரிழப்பு ஏற்படும் முன்பு இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story