வீரபாண்டி அருகே கட்டிட தொழிலாளி மது பாட்டிலால் குத்திக்கொலை கொலையாளியை போலீசார் தேடிவருகிறார்கள்


வீரபாண்டி அருகே கட்டிட தொழிலாளி மது பாட்டிலால் குத்திக்கொலை கொலையாளியை போலீசார் தேடிவருகிறார்கள்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:30 PM GMT (Updated: 20 Jan 2019 7:16 PM GMT)

வீரபாண்டி அருகே கட்டிட தொழிலாளி மதுபாட்டிலால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையாளியை போலீசார் தேடிவருகிறார்கள்.

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி பிரிவுக்கு உட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் பரணி டையிங் அருகில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்தவருக்கு சுமார் 20 வயது இருக்கும் பேண்ட்–சட்டை அணிந்திருந்தார்.

அவரது கழுத்தில் மதுபாட்டிலால் சரமாரியாக குத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அத்துடன் அருகில் மதுபாட்டில்கள் காணப்பட்டன. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்திற்கு மர்ம ஆசாமிகள் அவரை அழைத்து வந்து மது குடிக்கச்செய்துள்ளனர். பின்னர் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலை எடுத்து உடைத்து அதன் மூலம் கழுத்தில் சரமாரியாக குத்தி அவரை கொலை செய்து விட்டு தப்பிச்சென்றதாக தெரிகிறது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை கமி‌ஷனர் உமா, திருப்பூர் தெற்கு உதவி கமி‌ஷனர் நவீன்குமார் மற்றும் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு பிணமாக கிடந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவரது சட்டைப்பையில் ஆதார் அடையாள அட்டை இருந்தது.

அதன் மூலம் அவர் திருப்பூர் செல்லம் நகர் பாறைக்காடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் விக்னேஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், கட்டிடங்களுக்கு காங்கிரீட் கம்பி கட்டும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தர்மராஜ் மற்றும் விக்னேசின் தாயார் காமாட்சி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், கொலை செய்யப்பட்ட விக்னேஷ் மீது ஏற்கனவே செல்லம் நகரில் உள்ள மதுக்கடை பாரில் அடிதடி தகராறில் ஈடுபட்டதாக போலீசில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால் முன்விரோதம் காரணமாக யாரும் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து மது அருந்த செய்திருக்கலாம். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் சரமாரி குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம். அல்லது வேறு ஏதும் காரணமா? இருக்கலாம். இந்த கொலை சம்பவம் காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடந்து இருக்கலாம் என்றனர்.

இதைத்தொடர்ந்து விக்னேஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வருகிறார்கள். கட்டிட தொழிலாளி மதுபாட்டிலால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story