நாகர்கோவில் அருகே கிணற்றை தூர்வாரிய போது மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை


நாகர்கோவில் அருகே கிணற்றை தூர்வாரிய போது மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Jan 2019 11:15 PM GMT (Updated: 21 Jan 2019 9:06 PM GMT)

நாகர்கோவில் அருகே கிணற்றை தூர்வாரும் போது மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அழகியமண்டபம்,

நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 62), ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதிபுரம் எஸ்.எஸ். நகரில் 10 சென்ட் நிலம் வாங்கினார். அந்த நிலத்தில் கிணறு தோண்டி தென்னங்கன்றுகள் நட்டு பராமரித்து வந்தார்.

தற்போது அந்த நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். அதற்காக தென்னங்கன்றுகளை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு கிணற்றை தூர்வார முடிவு செய்தார்.

நேற்று காலையில் அந்த கிணறு தூர்வாரும் பணி நடந்தது. காலை 11 மணியளவில் கிணற்றுக்குள் இருந்து மண்ணை அள்ளும் போது மண்ணுடன் மனித எலும்புகளும் வந்தன. கிணற்றுக்குள் மனித எலும்புகள் கிடந்ததால் தூர்வாரும் பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், போலீசார் முன்னிலையில் அனைத்து எலும்புகளும் சேகரிக்கப்பட்டன. அத்துடன் கிணற்றுக்குள் இருந்து ஒரு கொலுசும், சட்டை பொத்தான் போன்றவையும் எடுக்கப்பட்டன. நெல்லையில் இருந்து உடல்கூறு ஆய்வாளர் ஜீவானந்தம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு எலும்புகளை ஆய்வு செய்தார். அப்போது இறந்தவர் பெண்தான் என்பதை உறுதி செய்தார்.

இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் மாயமானவர்களின் விவரங்களை சேகரிக்க தொடங்கினர். அப்போது கடந்த 2012-ம் ஆண்டு ஒரு இளம்பெண் மாயமான தகவல் தெரியவந்தது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கோவை மாவட்டம் கல்லமாபாளையம் பகுதியை சேர்ந்த தேவசகாயம் மகள் லிசி அடைக்கல மேரி (வயது 25), இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 2012-ம் ஆண்டு சிகிச்சைக்காக குமரி மாவட்டத்திற்கு வந்தார். இங்கு பார்வதிபுரத்தில் தற்போது மனித எலும்புகள் கிடந்த பகுதியில் ஒரு டாக்டர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் சிறு சிறு வீட்டு வேலைகளும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடினர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்தநிலையில், அவர் மாயமான பகுதியில் உள்ள கிணற்றில் பெண்ணின் எலும்பு கூடு கிடைத்துள்ளதால் அது லிசி அடைக்கல மேரியின் எலும்புகளாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து கிணற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட கொலுசு, பொத்தான் போன்றவை அடையாளம் காண்பதற்காக லிசி அடைக்கல மேரியின் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் எலும்பு கூடுகளின் மாதிரி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பிறகுதான் இறந்தவர் லிசி அடைக்கல மேரியா? என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story