40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வலுவாக உள்ளது துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேட்டி


40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வலுவாக உள்ளது துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 9:44 PM GMT)

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வலுவாக உள்ளது என்று துணை சபாநாயகர் மு.தம்பிதுரை கூறினார்.

கிருஷ்ணகிரி,

நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. கொள் கை பரப்பு செயலாளருமான மு.தம்பிதுரை கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க. அரசின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. தற்போது தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இந்த ஆட்சிக்கு மக்களின் ஆதரவு உள்ளது. ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்களை, அவரது எண்ணத்தை இந்த ஆட்சி செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தயாராக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 40 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.

தற்போது வரையில் அ.தி.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நடந்து முடிந்த 2009, 2014 நாடாளுமன்ற தேர்தலிலும், 2016 சட்டசபை தேர்தலிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று இமாலய வெற்றியை பெற்றார். மத்திய அரசுடன் மாநில அரசு என்ற முறையில் நாங்கள் நட்புணர்வுடன் இருந்தோம்.

அதே நேரத்தில் அரசியல் ரீதியாகவும் இருவரும் இணக்கமாக தான் இருக்க வேண்டும் என்று கூற முடியாது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு எங்கள் கட்சியின் செயற்குழு கூடி, கூட்டணி வேண்டுமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இரட்டை இலை என்ற சின்னத்திற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது. எனவே 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வலுவாக உள்ளது. கூட்டணி குறித்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தான் முடிவு எடுப்பார்கள்.

காவிரி பிரச்சினையில் இதுவரை தீர்வு காணப்படவில்லை. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்று தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாங்கள் ஜி.எஸ்.டி. வரியை அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை தரவில்லை.

இதற்காக பிரதமர் மோடியை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், நான் உள்ளிட்டோர் சந்தித்தோம். ரூ.9,500 கோடி வரையில் தமிழகத்திற்கு வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதைத் தவிர கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ரூ.15 ஆயிரம் கோடி கேட்டோம். மத்திய அரசை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. அதை வழங்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்டு செய்தார்கள். அதை நீக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிகளும் அதற்காக குரல் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மாதையன், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கட்டப்பன், கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், காவேரிப்பட்டணம் முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பிரபாகரன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ராதா கார்த்திக், ஓசூர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story