கோவில்பட்டி அருகே பரிதாபம் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை


கோவில்பட்டி அருகே பரிதாபம் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Jan 2019 11:32 PM GMT (Updated: 21 Jan 2019 11:32 PM GMT)

கோவில்பட்டி அருகே பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். துக்கம் விசாரிக்க சென்ற அவருடைய தந்தையின் நண்பர் விபத்தில் பலியானார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே வானரமுட்டி-ஜமீன் தேவர்குளம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 50). இவருடைய மகள் ரேணுகா தேவி (25). பி.காம். பட்டதாரி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரேணுகாதேவி நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த ரேணுகா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ரேணுகாதேவி தற்கொலை செய்தது குறித்து, அவருடைய தந்தையின் நண்பரான வானரமுட்டி முத்து நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்செல்வனுக்கு (48) தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் துக்கம் விசாரிப்பதற்காக இரவில் தனது மோட்டார் சைக்கிளில் முனியசாமியின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வானரமுட்டியில் உள்ள மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகில் சென்றபோது, சாலையின் குறுக்காக திடீரென்று ஒரு நாய் ஓடியது.

இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வனை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த தமிழ்செல்வனுக்கு ஜெயந்தி (45) என்ற மனைவியும், சுரேஷ்குமார் (23) என்ற மகனும், சத்யா (20) என்ற மகளும் உள்ளனர். பட்டதாரி பெண் தற்கொலை செய்ததும், துக்கம் விசாரிக்க சென்ற லாரி டிரைவர் விபத்தில் உயிரிழந்ததும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story