எதிர்க்கட்சிகளின் கேள்விகளை பிரதமர் சகித்துக்கொள்ள வேண்டும் சிவசேனா சொல்கிறது


எதிர்க்கட்சிகளின் கேள்விகளை பிரதமர் சகித்துக்கொள்ள வேண்டும் சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 21 Jan 2019 11:55 PM GMT (Updated: 21 Jan 2019 11:55 PM GMT)

ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வைக்கும் கேள்விகளை பிரதமர் மோடி சகித்துக்கொள்ளவேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

ஆளும் பா.ஜனதா அரசுக்கு எதிராக பலமான எதிர்க்கட்சியை உருவாக்கும் முயற்சியாக மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடத்திய பொதுக்கூட்டத்தில் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் கலந்துகொண்டனர்

இந்தநிலையில் குஜராத்தில் பீரங்கி தொழிற்சாலை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்தை கிண்டல் செய்யும் விதத்தில் பேசினார்.

இதுகுறித்து நேற்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டிருந்த தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உத்தவ் தாக்கரேவுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால் சிவசேனா முதலில் தனது சொந்த நிலமான மராட்டியத்தை வாக்கு பிழையில் இருந்து திருத்தவேண்டி உள்ளது.

பானர்ஜி அமைத்துக்கொடுத்த மேடையில் ஏறியவர்கள் அனைவரும் மதசார்ப்பற்றவர்கள். ஆனால் சிவசேனா போலி மதசார்பற்ற கட்சி இல்லை.

நாங்கள் ‘இந்துத்துவா’ கொள்கையை பின்பற்றுகிறோம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் மற்றும் பொது சிவில் சட்டம் போன்ற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

ஆனால் சிவசேனாவின் நிலைப்பாட்டை அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட யாரும் விரும்ப மாட்டார்கள்.

தேர்தலின் வழியாக ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள பா.ஜனதாவுக்கு உரிமை உள்ளது. இதேபோல் ஆளும் கட்சியின் தவறுகளை எடுத்துக்கூறி தோற்கடிக்க எதிர்க்கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்விலாஸ் பஸ்வான், நிதிஷ் குமார் மற்றும் ராம்தாஸ் அத்வாலே போன்ற வர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற் கும் எதிரானவர்கள். ஆனால் அவர்கள் சந்தோஷமாக பா.ஜனதாவுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்கின் றனர்.

தி.மு.க. உள்பட மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா, சரத் யாதவ், அருண் ஷோரி, யஷ்வந்த் சிங் என தற்போது எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு முகங்களும் பா.ஜனதாவின் கூட்டணியில் இருந்தவர்கள் தான். ஏன் மாயாவதி கூட ஒரு முறை பா.ஜனதாவுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர்கள் யாரும் தேசவிரோதிகள் என அழைக்கப்படவில்லை. தற்போது அப்படி அழைக்கப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு எதிராக வைக்கும் கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடி சகித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story