அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்


அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 7:27 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பணிக்கு செல்லாமல் கலெக்டர் அலுவலகம் முன்பு காலையிலேயே ஒன்று திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோவின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார், குமரி அனந்தன், ராமர், கவியரசன், அருள்ஜோதி ஆகியோர் பேசினர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ- ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மகேந்திரன் கோரிக்கைகளை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள சங்கங்களான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு பணியாளர்கள் சங்கம், உயர்நிலை-மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 36 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அந்தப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 

Next Story