ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம்: நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பங்கேற்பு


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம்: நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 9:32 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும். 3,500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் அதிக அளவில் ஆதரவு இருந்தது. மாவட்டத்தில் உள்ள 1,363 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,634 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. 3,360 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். 193 ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்பில் இருந்தனர். பணிக்கு வராதவர்களின் சதவீதம் 53.45 ஆகும். அதே சமயத்தில் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த போராட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் 13,043 அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் 432 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை தொடர்ந்து பள்ளிகளில் செய்யப்பட்டு இருந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:-

ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் எந்த ஒரு பள்ளியும் மூடப்படவில்லை. பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிகளில் பயிற்சி பெறும் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தாலும், கற்பித்தல் பணி முழுமையாக பாதிக்கப்பட்டது என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராமு, செல்வராஜ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் முருக.செல்வராஜன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் நன்றி கூறினார். இதையொட்டி போலீசார் பூங்கா சாலையில் செல்லும் வாகனங்களை திருப்பி விட்டனர்.

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மோகனூர் வட்டார ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைச்செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் சரவணன், அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரகுராம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் அத்தபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் தங்கவேல், ஆசிரியர் பயிற்றுநர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணைச் செயலர் கணேசன் நன்றி கூறினார். இதில் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி தலைமை தாங்கினார். வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லோகநாதன், எடின்பரோகோமகன், அத்தியப்பன், மாணிக்கம், செந்தில்ராஜா, பழனிசாமி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

குமாரபாளையத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த கணேசன் தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பரமத்தி வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்செங்கோடு, சேந்தமங்கலம், கொல்லிமலை என நேற்று மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story