திருப்பரங்குன்றம் கோவிலில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. 5 மணி நேரம் நடத்திய சிறப்பு யாகம் தனிநபராக வந்து கலந்துகொண்டார்


திருப்பரங்குன்றம் கோவிலில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. 5 மணி நேரம் நடத்திய சிறப்பு யாகம் தனிநபராக வந்து கலந்துகொண்டார்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 10:42 PM GMT)

திருப்பரங்குன்றம் கோவிலில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நேற்று 5 மணி நேரம் நடந்த சிறப்பு யாகத்தில் தனிநபராக கலந்துகொண்டார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் நேற்று வந்தார். அவருடன் கட்சியினரும், குடும்பத்தினர் யாரும் வரவில்லை.

அவர் சார்பில் கோவிலில் கந்த ஹோம பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர் கோவிலில் தரிசனம் செய்ததும், பின்னர் ஹோம பூஜையில் கலந்துகொண்டார். அக்னி வளர்த்து நடந்த இந்த சிறப்பு யாகம் சுமார் 5 மணி நேரம் நடந்தது.

இந்த ஹோமம் செய்தால், அரசியலில் எதிர்ப்பை சமாளிக்க முடியும் என்றும், உயர் பதவி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. அதே நேரத்தில் தோப்பு வெங்கடாசலம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் கடந்த ஆண்டு ஆயில்யம் நட்சத்திர நாளில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டார்.

இந்த நிலையில் நேற்றும் ஆயில்ய நட்சத்திரத்துக்குரிய நாள் என்பதால் கந்த ஹோமம் நடத்தி வழிபட்டார் என்று கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க.வினரிடையே விசாரித்த போது, தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அமைச்சர் பதவியை எதிர்நோக்கி இருப்பதாகவும், அதற்காக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு தனிநபராக வந்து யாகம் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.


Next Story