2-வது நாளாக ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட 3,308 பேர் கைது


2-வது நாளாக ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட 3,308 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 8:38 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள். இதில் 3,308 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஈரோடு,

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியது. முதல்நாளில் தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 2-வது நாளான நேற்று தாலுகா தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 10 தாலுகா தலைநகரங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

ஈரோடு தாலுகா அளவிலான சாலை மறியல் போராட்டம் ஈரோடு கச்சேரி வீதியில் நடந்தது. முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு கூடினார்கள். அங்கு பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்கள். பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பாஸ்கர்பாபு மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வி.எஸ்.முத்துராமசாமி, ரங்கசாமி, சிவசங்கர், ராதா, மணிபாரதி மற்றும் நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கச்சேரி வீதிக்கு சென்றனர்.

அங்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜகுமார் மற்றும் போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்து மறியலுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நடுரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் வேன்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூட பஸ்கள், மினி பஸ்களில் ஏற்றப்பட்டு ஈ.வி.என். ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மொத்தம் 406 பெண்கள் உள்பட 527 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல் மொடக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 310 பெண்கள் உள்பட 418 பேரும், பவானியில் 273 பெண்கள் உள்பட 367 பேரும், அந்தியூரில் 179 பெண்கள் உள்பட 327 பேரும் கைது செய்யப்பட்டனர்.

நம்பியூரில் 124 பெண்கள் உள்பட 198 பேரும், கோபியில் 250 பெண்கள் உள்பட 370 பேரும், சத்தியமங்கலத்தில் 177 பெண்கள் உள்பட 320 பேரும், பெருந்துறையில் 355 பெண்கள் உள்பட 531 பேரும், கொடுமுடியில் 108 பெண்கள் உள்பட 163 பேரும், தாளவாடியில் 18 பெண்கள் உள்பட 87 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 10 தாலுகாக்களிலும் 1,108 ஆண்கள், 2 ஆயிரத்து 200 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 308 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று (வியாழக்கிழமை) 3-வது நாள் போராட்டம் அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் மறியல் போராட்டமாக நடத்தப்படுகிறது. ஈரோட்டில் காளைமாடு சிலை அருகே இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட அளவில் அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து உள்ளனர்.

நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 ஆயிரத்து 655 பேர் பணிக்கு செல்லவில்லை. அரசு ஊழியர்களை பொறுத்தவரை 4 ஆயிரத்து 340 பேர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. பல பள்ளிக்கூடங்களில் மாணவர் வருகை குறைந்தது. எல்.கே.ஜி. வகுப்பு மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஆசிரிய-ஆசிரியைகளும் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து நேற்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

Next Story