மாவட்டத்தில் பனிப்பொழிவால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு - விவசாயிகள் கவலை


மாவட்டத்தில் பனிப்பொழிவால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 25 Jan 2019 10:45 PM GMT (Updated: 25 Jan 2019 7:11 PM GMT)

தேனி மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உப்புக்கோட்டை, 

தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, கோட்டூர், சின்னமனூர், கூடலூர், போடி மீனாட்சிபுரம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பட்டுக்கூட்டில் ‘கோலார் கோல்டு’ (மஞ்சள்), வெள்ளை என 2 ரகங்களில் அனைத்து பருவங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே வேளையில் வெள்ளை ரக பட்டுக்கூடு உற்பத்தி குறிப்பிட்ட பருவநிலைக்கு ஏற்ப உற்பத்தியாகும்.

இந்த ரக பட்டுக்கூடுகளுக்கு சந்தைகளில் அனைத்து நாட்களிலும் கடும் கிராக்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் வெள்ளை ரக பட்டுக்கூடு தான் 80 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வகை பட்டுக்கூடு வளர்ப்புக்கு மிதமான பருவநிலை முக்கியமானதாகும் தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளை ரக பட்டுக்கூடு கோவை, ஒசூர், கர்நாடக மாநிலம் ராம்நகர் மற்றும் ஆந்திர மாநிலம் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

ஒரு ஏக்கரில் உள்ள மல்பெரி செடிகள் மூலம் 80 அட்டைகள் பட்டுக்கூடு உற்பத்தி செய்யலாம். முட்டை வைத்த 30 நாட்களில் புழுக்கள் நன்றாக வளர்ந்து விடும். வழக்கமான நாட்களில் 80 முட்டைகள் வளர்த்தால் 60 முதல் 70 கிலோ வரை பட்டுக்கூடுகள் உற்பத்தியாகும். தற்போது நிலவும் பனிப்பொழிவால் 40 கிலோ முதல் 50 கிலோ வரை மட்டுமே பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்திலுள்ள பட்டுக்கூடு கொள்முதல் வியாபாரிகள் குறைவான விலைக்கு கேட்பதால் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து கோவை, கர்நாடக மாநிலம் ராம்நகரில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். வெள்ளை ரக பட்டுக்கூடு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story