திருச்சி அருகே கோவில் சிலைகளை திருடி விற்ற முன்னாள் ஊழியர் கைது


திருச்சி அருகே கோவில் சிலைகளை திருடி விற்ற முன்னாள் ஊழியர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 11:15 PM GMT (Updated: 30 Jan 2019 7:44 PM GMT)

திருச்சி அருகே கோவில் சிலைகளை திருடி விற்ற முன்னாள் ஊழியரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி ஜீயபுரம் திருப்பராய்த்துறையில் தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த வைகாசி விசாக திருவிழாவின்போது, கோவிலில் இருந்த போகசக்தி அம்மன், சண்டிகேசுவரர் ஆகிய சிலைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்த அங்காளம்மன் சிலையும் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இந்த 3 சிலைகள் திருட்டு குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் ஜீயபுரத்தில் உள்ள தாருகாவனேசுவரர் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் கோவிலில் அப்போதைய செயல் அலுவலராக இருந்த ஆனந்தகுமார்ராவ், ஊழியர் கண்ணன், கோவிலில் பூக்கட்டும் வேலை செய்து வந்த ராமநாதன் ஆகியோர் சேர்ந்து சிலைகளை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் ராமநாதனை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இதையடுத்து முன்னாள் ஊழியர் கண்ணனிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று அவரையும் கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆனந்தகுமார்ராவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Next Story