மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்தது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 31 Jan 2019 10:30 PM GMT (Updated: 31 Jan 2019 5:34 PM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்தது.

மேட்டூர்,

கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் கேரளம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இந்த நீர்வரத்தின் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையின் மூலம் பயன்பெறும் டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் மாறி, மாறி திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 28-ந் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் மிகக்குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதாவது வினாடிக்கு 200 கனஅடிக்கு கீழ் நீர்வரத்து குறைந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 132 கனஅடியாக இருந்தது.

இந்த நிலையில், அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 8-ந் தேதி 80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 70.74 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன.

Next Story