இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 14¾ லட்சம் வாக்காளர்கள் பெண்களை விட 14,239 ஆண்கள் அதிகம்


இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 14¾ லட்சம் வாக்காளர்கள் பெண்களை விட 14,239 ஆண்கள் அதிகம்
x
தினத்தந்தி 31 Jan 2019 11:00 PM GMT (Updated: 31 Jan 2019 9:17 PM GMT)

குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 14¾ லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பெண்களை விட 14,239 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2019 முடிவடைந்த நிலையில் நேற்று அந்தந்த மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று காலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-9-2018 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 32 ஆயிரத்து 147 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 14 ஆயிரத்து 806 பேரும், இதரர் 148 பேருமாக மொத்தம் 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தநிலையில் 1-9-2018 முதல் 31-10-2018 வரை நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2019 மேற்கொள்ளப்பட்டதில் 6 சட்டசபை தொகுதிகளிலும் 17,382 ஆண் வாக்காளர்களும், 20,344 பெண் வாக்காளர்களும், 5 இதரர்களும் ஆக மொத்தம் 37,731 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 6,942 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக விளவங்கோடு தொகுதியில் 5,212 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 6 தொகுதிகளிலும் 3,903 ஆண் வாக்காளர்களும், 3,763 பெண் வாக்காளர்களும், 5 இதரர்களும் ஆக மொத்தம் 7,671 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக விளவங்கோடு தொகுதியில் 1,781 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக நாகர்கோவில் தொகுதியில் 822 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 45 ஆயிரத்து 626 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 387 பேரும், இதரர்கள் 148 பேருமாக மொத்தம் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்ச வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள சட்டசபை தொகுதி கன்னியாகுமரி ஆகும். இதில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 508 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்ச வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள தொகுதியாக பத்மநாபபுரம் தொகுதி திகழ்கிறது. இதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர்.

1-1-2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர்கள் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் (தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வாக்காளர் உதவி மையம் இன்று (அதாவது நேற்று) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் வாக்காளர்கள் இந்த உதவி மையத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் குறித்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் அவர்களது பெயர் இடம் பெற்றுள்ள பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 1-1-2019 அன்று 18 வயது நிரம்பிய புதிய இளம் வாக்காளர்கள் அவர்களது பெயரை படிவம்-6 மூலம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் அல்லது www.nvsp.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய எந்த ஒரு நபரும் விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணைய கோட்பாட்டினை அனைவரும் பின்பற்றலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர்கள் பவன்குமார் கிரியப்பனவர் (நாகர்கோவில்), சந்தியா அரி (பத்மநாபபுரம்), தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணியன், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்துரு, தி.மு.க. சார்பில் லீனஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story