வீட்டு மனை அனுமதிக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


வீட்டு மனை அனுமதிக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2019 11:15 PM GMT (Updated: 2 Feb 2019 7:41 PM GMT)

வீட்டு மனை அனுமதிக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கலிங்கமலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35). இவர் குன்னத்தூர் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடு மனை வரன்முறை அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் குன்னத்தூர் பஞ்சாயத்து மேலப்பண்ணையை சேர்ந்த ஆரோக்கியசாமி (55) என்பவர் வீடு கட்ட வீட்டு மனை வரன்முறை அனுமதி கோரி குன்னத்தூர் ஊராட்சி செயலாளரிடம் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து அனுமதி வழங்க வேண்டுமானால் ரூ.12 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆரோக்கியசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி, ஆரோக்கியசாமியின் மகன் வேளாங்கண்ணி (30) இதுகுறித்து திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் ஆரோக்கியசாமி, வேளாங் கண்ணி ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரம் நோட்டுகளை குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ராஜேந்திரனிடம் வழங்கினர்.அப்போது மறைந்து இருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் நெப்போலியன்ராஜ் மற்றும் போலீசார் ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனை அங்கு வரவழைத்து அவர் முன்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

பின்னர் ராஜேந்திரனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கலிங்கமலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அங்கும் சோதனை நடத்தினர். அதையடுத்து ராஜேந்திரனை கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஊராட்சி செயலாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story