மதுரையில் பயங்கரம்: 1½ பவுன் நகைக்காக மூதாட்டி கொலை


மதுரையில் பயங்கரம்: 1½ பவுன் நகைக்காக மூதாட்டி கொலை
x
தினத்தந்தி 3 Feb 2019 11:15 PM GMT (Updated: 3 Feb 2019 8:24 PM GMT)

மதுரை செல்லூரில் 1½ பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை,

மதுரை செல்லூர் சத்தியமூர்த்திநகர் 6–வது தெருவை சேர்ந்தவர் உசைன். இவருடைய மனைவி மம்தாபீவி (வயது 87). உசைன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து, மம்தாபீவி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று காலை மம்தாபீவிக்கு உணவு கொடுப்பதற்காக அவரது உறவினர் ஒருவர் அங்கு வந்தார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.

மேலும் அங்குள்ள ஒரு அறைவில் மம்தாபீவி, மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும், அங்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மம்தாபீவியின் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 1½ பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்லூர் கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்த மூதாட்டி ஆண்டாள்(80) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் அணிந்திருந்த நகையும் திருடுபோனதாக தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து 2 சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story