கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2019 10:45 PM GMT (Updated: 4 Feb 2019 8:30 PM GMT)

செங்கல்பட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், 4 பேரை பிடிக்க முயன்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடினார்கள்.

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 29). தரமணியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை தியாகராயநகரை பகுதியை சேர்ந்தவர் மதன்(32). இவருடைய மனைவி ரேணுகாதேவி. ஹரிக்கும், ரேணுகாதேவிக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இது ரேணுகாதேவியின் கணவர் மதனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஹரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதனால் மதன், தனது நண்பர்களான ராமு(37) உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து ஆட்டோவில் தரமணியில் உள்ள ஹரியின் அலுவலகம் அருகே சென்றனர்.

அந்த வேளையில் ஹரி, டீ குடிப்பதற்காக நிறுவனத்தின் அருகில் உள்ள டீக்கடைக்கு வந்தார். இதனை தொடர்ந்து மதனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ஹரியை ஆட்டோவில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவன அதிகாரிகள் ஹரி கடத்தப்பட்டு குறித்து தரமணி போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரியை தேடி வந்தனர். இதற்கிடையே ஹரியை கடத்திச்சென்ற 5 பேரும் செங்கல்பட்டு பழவேளி பகுதியில் ஆட்டோவை நிறுத்தி அவரை கீழே இறக்கி விட்டனர். தொடர்ந்து அவரின் தோளில் அரிவாளால் வெட்டினர். இதில் வெட்டுக்காயம் அடைந்த ஹரி, உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

அந்த வேளையில், அந்த பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த வாகன சோதனை சாவடியில் படாளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நின்ற போலீசார் இதைப்பார்த்ததும் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து ஹரியை வெட்டிய மதனை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மற்ற 4 பேரையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்றனர்.

கும்பல் வெட்டியதில் காயம் அடைந்த ஹரியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 அரிவாளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மற்ற 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story