திருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கவேண்டும் மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா வலியுறுத்தல்


திருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கவேண்டும் மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Feb 2019 11:20 PM GMT (Updated: 5 Feb 2019 11:20 PM GMT)

திருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கவேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கையான அப்சராவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமனம் செய்தார். இந்தநிலையில் அப்சரா நேற்று புதுவை வந்தார்.

அவரை திருநங்கைகள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அப்சரா சட்டசபைக்கு சென்று முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து அப்சரா நிருபர்களிடம் கூறியதாவது:–

மகளிர் காங்கிரசை நாடு முழுவதும் பலப்படுத்த வேண்டும். இந்த பணியில் நானும் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன். பெண்களைப்பற்றி பாரதீய ஜனதா கட்சி இழிவாக பேசி வருகிறது. அவர்களை விரட்டும் நேரம் வந்துவிட்டது.

திருநங்கைள் அரசியலுக்கு வந்து சேவையாற்ற வேண்டும். அவர்களுக்கு கல்வி, வீட்டுவசதி உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கவேண்டும்.

சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை பாரதீய ஜனதா அரசு தவறாக பயன்படுத்துகிறது. 2018–ம் ஆண்டில் 1½ கோடி வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமான அரசாக உள்ளது. உலகம் சுற்றும் பிரதமராக மோடி உள்ளார்.

இவ்வாறு அப்சரா கூறினார்.


Next Story