ஓசூரில், வருகிற 10-ந்தேதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல்ல திருமணம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்


ஓசூரில், வருகிற 10-ந்தேதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல்ல திருமணம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்
x
தினத்தந்தி 6 Feb 2019 10:15 PM GMT (Updated: 6 Feb 2019 6:48 PM GMT)

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. இல்ல திருமணம் வருகிற 10-ந்தேதி ஓசூரில் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. இல்ல திருமணம் வருகிற 10-ந்தேதி ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். மேலும் இதில் தலைமை கழக நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓசூர் வருகையையொட்டி தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமணம் நடைபெறும் இடத்தின் அருகில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மு.க.ஸ்டாலின் வரும் வழி எங்கும் சாலையில் நுழைவு வாயில், கட்சி கொடிகள், பேனர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பந்தல் அமைக்கும் பணி மற்றும் திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. முருகன், ஓசூர் நகர்மன்ற முன்னாள் தலைவரும், தி.மு.க. நகர பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் ஓசூர் வருகையையொட்டி தேன்கனிக்கோட்டை சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டையை சுற்றியுள்ள கிராமமக்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள தேவையான பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story