வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Feb 2019 11:00 PM GMT (Updated: 6 Feb 2019 8:15 PM GMT)

வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 40). இவரது மனைவி அடைக்காயி. பழனியாண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அடைக்காயி, தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பழனியாண்டியின் மனைவி அடைக்காயி, குழந்தைகளுடன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கீரனூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் திருமணம் முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த அடைக்காயி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த 7½ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் அடைக்காயி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

Next Story