ரிஷிவந்தியம் அருகே டிரைவர், விஷம் குடித்து தற்கொலை


ரிஷிவந்தியம் அருகே டிரைவர், விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Feb 2019 10:45 PM GMT (Updated: 6 Feb 2019 9:04 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே கடன் தொல்லையால் டிரைவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள நூரோலை பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் ராஜமாணிக்கம் (வயது 34), டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து வாங்கிய கடனை ராஜமாணிக்கத்தால் திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத போது, விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜ மாணிக்கத்தை மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜமாணிக்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது அண்ணன் ரமேஷ், ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story