அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2019 10:45 PM GMT (Updated: 9 Feb 2019 7:09 PM GMT)

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கடையூர்,

திருக்கடையூரில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றிய ஆதிதிராவிடர் அமைப்பாளர் சிவராஜ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எழில்நம்பி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.

இதில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story