ஈரோடு ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஈரோடு ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Feb 2019 9:45 PM GMT (Updated: 11 Feb 2019 9:44 PM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவையை கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேடைகளுக்கு படிக்கட்டு வழியாக ஏறி செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே பேட்டரி கார் வசதி செய்து தர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி மற்றும் ஈரோடை அமைப்பு சார்பில் ரூ.4 லட்சம் செலவில் பேட்டரி கார் வழங்கப்பட்டது. இதன் சேவை தொடக்க விழா ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சுதா ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனரும், ஈரோடை அமைப்பின் தலைவருமான டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தார். விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கலந்து கொண்டு கொடியசைத்து பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து டாக்டர் சுதாகர் கூறும்போது, ‘‘ஈரோடு ரெயில் நிலையத்திற்கு முன்பு உள்ள சென்னிமலை ரோட்டில் இருந்து நடைமேடை வரை பயணிகளை கொண்டு சென்று விடுவதற்காக பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக லிப்ட் வழியாக பேட்டரி கார் நடைமேடைக்கு கொண்டு செல்லப்படும். இதை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்’’, என்றார். விழாவில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க தலைவர் துரைராஜ், தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் இளங்கவி, வக்கீல் அருண்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story